கள்ளிமலர்

A tale of a cactus flower..

Saturday, July 31, 2010

உலகிலே அதிகம் பொய் சொல்லும் இடம்

வணக்கம் நண்பர்களே!
தமிழ் உயிர் எழுத்துக்களை கொண்டு ஒரு கவிதை எழுத நினைத்து அதற்கான முயற்சியில் இறங்கி எழுதிய கற்பனைக் கிறுக்கல்களை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். நன்றி

உலகிலே அதிகம் பொய் சொல்லும் இடம்

அலுவல் இல்லாத அன்றொரு நாளில்
அமைதியான ஓர் காலைப் பொழுதில்
அழைப்புமணியின் ஓசையைத் தொடர்ந்து
அடைந்தேன் வாசல் கதவை, நடந்து.

ஆறடிகதவை ஓரடிதிறந்து, பார்க்கும் வேளை
ஆள் ஒன்று நிற்பதை கண்டேன், அவரிடம்
ஆர்வமாய் கேட்டேன், யார் நீங்களென்று?
ஆடியேபோனேன் அவர் சொன்னதைக்கேட்டு

இறைவனென்று இனிமையாய் சொன்னார்
இமைதட்டாமல் என்னையே பார்த்தார்
இறுகிய முகத்துடன் அவரையே  பார்த்தேன்
இறுதில் கேட்டேன், எப்படி உங்களை நம்ப?

ஈரேழு உலகத்தை  ஆள்கின்ற நாயகன்
ஈரமே நிறைந்த இதயத்தை கொண்டவன்
ஈசன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்து
ஈசல் எனக்கு சொன்ன பதில் யாதனில்?

உலகைச் சுற்றிவர புறப்பட்டேன் மகனே
உன்னையும் அழைக்க நினைத்தேன் என்றான்.
உலகிலே அதிகம் பொய் சொல்லும் இடத்தை
உடனடியாக காட்டிடச் சொன்னான் என்னை.

ஊசியை எடுத்து கடல் நடுவே வீசி பின்
ஊரையேகூட்டி தேடினாலும் கிடைத்திடுமோ?
ஊசலாடியது என் மனது, இறைவனுக்கு
ஊழியம் செய்திடத் தவியாய் தவித்தது.

எத்தனையோ  கோடி மாந்தர்கள் உள்ள உலகில்
எந்தன்முன் இறைவன் வந்ததில்  மகிழ்ந்தேன்.
எப்படியேனும் ஈசனின் கேள்விக்கான  பதிலை
எடுத்துரைக்க முயன்றேன், திணறினேன்.

ஏங்கிய மனதில் தோன்றின ஒவ்வொன்றாய்
ஏற்றமிக்க  நீதிமன்றம்?, இல்லை இல்லை
ஏய்ப்பவர் நிறைந்த சட்டசபை? இல்லை - பின்
ஏதோ அந்த இடம்?, தவித்தது எந்தன் மனம்.

ஐந்தே நிமிடத்தில் சொல்லிவிட இது என்ன
ஐந்தாம் வகுப்பு வினாத்தாள் கேள்வியா?
ஐயனை நோக்கினேன் பதற்றமாய் - அவரை
ஐயத்தோடு அழைத்தேன் வீட்டினுள் வரும்படி

ஒளிவெள்ளம் உருவான பரம்பொருள், காணும்
ஒவ்வொரு காட்சியின்  உட்பொருள்,  மானிடன்
ஒருவன் நான் அழைத்ததற்கு, மறுமொழி இன்றி
ஒத்துக்கொண்டார், வீட்டினுள் நடந்து வந்தார்

ஓரமாய் இருந்த இருக்கையில் அமர்ந்தவர்
ஓசையின்றி மெதுவாய் கேட்டார், போவாமா?
ஓட்டமும் நடையுமாய் நடந்தேன் அவருடன்
ஓரக்கண்ணில் என்னை பார்த்தவர், உடனே 

கொளதாரி கூட்டம்போல்  மக்கள் நிறைந்த இது
ஔவைசண்முகி சாலையா என மெல்லக்கேட்டார்.
ஔவைசண்முகி சாலைதான் என்றவன் அழைத்துச் சென்றது
ஔவை சிலைக்கு அருகில், நாங்கள் தேடிய இடத்திற்கு

எஃகு கோட்டைபோல் காட்சியளித்த அலுவலகத்தினுள்
பஃருளியாற்றில் நீராடியதாக ஒருவர் கதைதுக்கொண்டிருந்தார்
அஃது எப்படி சாத்தியமென அய்யன் வினவ, சொன்னேன்
அஃது ஓர் தொலைகாட்சி நிலையம், நாம் தேடும் இடம்

மகிழ்ந்தவர், மறைந்து போனார். நானும் உறக்கம் கலைந்து எழுந்தேன் வேலைக்குச் செல்ல.

குறிப்பு: பஃருளியாறு என்பது கிறிஸ்து பிறப்பதற்கு 30 ,000  ஆண்டுகளுக்கு முன் குமரிக்கண்டத்தில் ஓடிய ஆறு.
http://www.viswamurugu.com/link2.html

அன்புடன் பாலா வானுமாமலை

Saturday, July 17, 2010

உயிரோடு உயிர் தந்தாள்


அன்னையும் பிதாவும் முன்நெறி தெய்வம் என்ற அவ்வையார் அவர்களின் வாக்குப்படி பெற்ற தாய் தந்தையரை பேணிக்காக்கும் பிள்ளைகளை மனதார வாழ்த்துகிறேன். 

அதே சமயம் மிகவும் கஷ்ட்டப்பட்டு வளர்த்த தாய் தந்தையரை முதியோர் இல்லத்திலோ அல்லது அநாதையாகவோ விட்டு விட்டு கோவில் கோவிலாக கும்பிடப்போகும் சுயநலவாதிகளுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் உங்கள் தாய் தந்தையருக்கு இன்று செய்வது போல் நாளை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகள் செய்வார்கள் என்பது நிச்சயம்.

உயிரோடு உயிர் தந்தாள்

உயிரோடு உயிர் தந்தாள், மணி
வயிறோடு உனை சுமந்தாள்
ஈரைந்து மாதங்கள் தவமியற்றி
இறைவனை நித்தமும் வேண்டி
மரணத்தை தொடும் நிலையில்
மண்ணில் உன்னை  ஈன்றாள்
மரணவலி மறந்தாள், பிறந்த
மகன் உனை கண்டுமகிழ்ந்தாள்

உறக்கம்  பலநாள் தொலைத்தாள்
உணவையும் அவள் மறந்தாள்
உள்ளங்கையில் உன்னை வைத்து
உதிரத்தை பாலாக்கித் தந்தாள்
சீரோடும் சிறப்போடும் உன்னை
மார்போடு சுமந்தாள், வளர்த்தாள்
சீராக தமிழ் அமுதை தினமும்
செல்வமகன் உனக்குத் தந்தாள்

பேச்சு கற்றுத்தந்தாள் உனக்கு
பிள்ளைதமிழ்  சொல்லித்தந்தாள்
பெற்றமகன் மழலை மொழியில்
மற்றதெல்லாம் மறந்துநின்றாள்
கண்மணியாம் மகன்மேல் ஊரார்
கண்பட்டுவிடுமோ என்றெண்ணி
கலங்கினாள், அஞ்சினாள்- உனை
கவனமாக  காத்து வந்தாள்

நடக்கச் சொல்லித் தந்தாள், நீ
நடைபழகி விழும்போது, உனை
ஓடிவந்து எடுத்தாள், துடித்தாள்
மடியிலிட்டு தடவிக்கொடுத்தாள்
பாலர்பள்ளி செல்லும் பருவமதை 
பாசமகன் தொட்டானென்று
தாயவளும் மகிழ்ச்சிகொண்டாள்
தனயன் உனை அழைத்துச்சென்றாள்

கணம் கொண்ட புத்தக பை, தன்
கண்மணிக்கு வலிக்குமென்று
பெற்றவள் அவள் நினைத்ததினால்
நித்தமும் பை சுமந்திட்டாள்
பாலர்பள்ளி வாசலிலே, தன்
பாலகன் உனை வழியனுப்பி
கையசைத்தாள், கலங்கினாள்
கனவுகள் பல கண்டாள் அவள்

பள்ளிக்கூடம் படித்து வந்த
பிள்ளை நீயும் சொல்லக்கேட்டு
ஆனந்தம் அடைந்திட்டாள்
ஆண்டவனை துதித்திட்டாள்
விளையாட போன உன்னை
வினாடிஎல்லாம் தேடிட்டாள்
வீட்டுக்கு நீ வந்தவுடன்
விளையாட்டாய் கண்டித்தாள்

நாட்கள் பல கடந்து செல்ல, உன்
நடவடிக்கைகள் மாற்றம்கொள்ள
கல்லூரி முடிக்கும் முன்னே, தாயை
கண்ணீரில் கலங்க விட்டாய்
அமிர்தமென இதுவரைக்கும், நீ
ஆர்வமாய் விரும்பி  சாப்பிட்ட
அன்னையவள் சமயல்தனை
அலட்சியமாய்  பார்க்கலானாய்

சிறு உதவி செய்வதற்கும்
மறுத்து விட்டாய், தாய்மேல்
சினம் கொண்டாய், சீறினாய்
சிறு சிறு செயலிலும் வெறுத்தாய்
கலங்கிய கடல் போல தாய்
மனம் கலங்கிடச் செய்தாய்
கவலையே இல்லாமல் ஊர்
சுற்றினாய், ஊதாரியானாய்

அன்னையவள் பதறிவிட்டாள்
அச்சம்கொண்டாள் மகனைஎண்ணி
முன்னைவிட கடுமையாக
முறையிட்டாள் இறைவனிடம்
அன்ன ஆகாரம் மறந்திட்டாள்
ஆண்டவனை வேண்டி நின்றாள்
அனையவள் மிகவும் தவித்தாள்
அன்புமகன் உனையே  நினைத்தாள்

பெண்ணொருத்தி புதிதாக
உன்வாழ்வில் நுழைந்து விட
மதி மறந்து போனாயே, பெற்ற
மாதாவை நீ மறந்தாயே
உலகமாய் இதுவரைக்கும்
உன்கண்ணில் தெரிந்த தாய்
எதிரியாய் உன் கண்ணில்
இபொழுது தெரிந்திட்டாள்.

கண்ணுக்குள் உனை வைத்தால்
கண்மூட வலிக்கும் என்று
இதயத்தில் உன்னை வைத்து
இன்று வரை வளர்த்தவளை, உன்
இதயத்தில் ஒருத்தி வந்தவேளை
இரக்கமின்றி புறக்கணித்தாய்
இம்சித்தாய், முடிவாய் முதியோர்
இல்லத்தில் விட்டாயே, சரியா?

அன்புடன் பாலா வானுமாமலை