கள்ளிமலர்

A tale of a cactus flower..

Saturday, July 31, 2010

உலகிலே அதிகம் பொய் சொல்லும் இடம்

வணக்கம் நண்பர்களே!
தமிழ் உயிர் எழுத்துக்களை கொண்டு ஒரு கவிதை எழுத நினைத்து அதற்கான முயற்சியில் இறங்கி எழுதிய கற்பனைக் கிறுக்கல்களை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். நன்றி

உலகிலே அதிகம் பொய் சொல்லும் இடம்

அலுவல் இல்லாத அன்றொரு நாளில்
அமைதியான ஓர் காலைப் பொழுதில்
அழைப்புமணியின் ஓசையைத் தொடர்ந்து
அடைந்தேன் வாசல் கதவை, நடந்து.

ஆறடிகதவை ஓரடிதிறந்து, பார்க்கும் வேளை
ஆள் ஒன்று நிற்பதை கண்டேன், அவரிடம்
ஆர்வமாய் கேட்டேன், யார் நீங்களென்று?
ஆடியேபோனேன் அவர் சொன்னதைக்கேட்டு

இறைவனென்று இனிமையாய் சொன்னார்
இமைதட்டாமல் என்னையே பார்த்தார்
இறுகிய முகத்துடன் அவரையே  பார்த்தேன்
இறுதில் கேட்டேன், எப்படி உங்களை நம்ப?

ஈரேழு உலகத்தை  ஆள்கின்ற நாயகன்
ஈரமே நிறைந்த இதயத்தை கொண்டவன்
ஈசன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்து
ஈசல் எனக்கு சொன்ன பதில் யாதனில்?

உலகைச் சுற்றிவர புறப்பட்டேன் மகனே
உன்னையும் அழைக்க நினைத்தேன் என்றான்.
உலகிலே அதிகம் பொய் சொல்லும் இடத்தை
உடனடியாக காட்டிடச் சொன்னான் என்னை.

ஊசியை எடுத்து கடல் நடுவே வீசி பின்
ஊரையேகூட்டி தேடினாலும் கிடைத்திடுமோ?
ஊசலாடியது என் மனது, இறைவனுக்கு
ஊழியம் செய்திடத் தவியாய் தவித்தது.

எத்தனையோ  கோடி மாந்தர்கள் உள்ள உலகில்
எந்தன்முன் இறைவன் வந்ததில்  மகிழ்ந்தேன்.
எப்படியேனும் ஈசனின் கேள்விக்கான  பதிலை
எடுத்துரைக்க முயன்றேன், திணறினேன்.

ஏங்கிய மனதில் தோன்றின ஒவ்வொன்றாய்
ஏற்றமிக்க  நீதிமன்றம்?, இல்லை இல்லை
ஏய்ப்பவர் நிறைந்த சட்டசபை? இல்லை - பின்
ஏதோ அந்த இடம்?, தவித்தது எந்தன் மனம்.

ஐந்தே நிமிடத்தில் சொல்லிவிட இது என்ன
ஐந்தாம் வகுப்பு வினாத்தாள் கேள்வியா?
ஐயனை நோக்கினேன் பதற்றமாய் - அவரை
ஐயத்தோடு அழைத்தேன் வீட்டினுள் வரும்படி

ஒளிவெள்ளம் உருவான பரம்பொருள், காணும்
ஒவ்வொரு காட்சியின்  உட்பொருள்,  மானிடன்
ஒருவன் நான் அழைத்ததற்கு, மறுமொழி இன்றி
ஒத்துக்கொண்டார், வீட்டினுள் நடந்து வந்தார்

ஓரமாய் இருந்த இருக்கையில் அமர்ந்தவர்
ஓசையின்றி மெதுவாய் கேட்டார், போவாமா?
ஓட்டமும் நடையுமாய் நடந்தேன் அவருடன்
ஓரக்கண்ணில் என்னை பார்த்தவர், உடனே 

கொளதாரி கூட்டம்போல்  மக்கள் நிறைந்த இது
ஔவைசண்முகி சாலையா என மெல்லக்கேட்டார்.
ஔவைசண்முகி சாலைதான் என்றவன் அழைத்துச் சென்றது
ஔவை சிலைக்கு அருகில், நாங்கள் தேடிய இடத்திற்கு

எஃகு கோட்டைபோல் காட்சியளித்த அலுவலகத்தினுள்
பஃருளியாற்றில் நீராடியதாக ஒருவர் கதைதுக்கொண்டிருந்தார்
அஃது எப்படி சாத்தியமென அய்யன் வினவ, சொன்னேன்
அஃது ஓர் தொலைகாட்சி நிலையம், நாம் தேடும் இடம்

மகிழ்ந்தவர், மறைந்து போனார். நானும் உறக்கம் கலைந்து எழுந்தேன் வேலைக்குச் செல்ல.

குறிப்பு: பஃருளியாறு என்பது கிறிஸ்து பிறப்பதற்கு 30 ,000  ஆண்டுகளுக்கு முன் குமரிக்கண்டத்தில் ஓடிய ஆறு.
http://www.viswamurugu.com/link2.html

அன்புடன் பாலா வானுமாமலை

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home