கள்ளிமலர்

A tale of a cactus flower..

Friday, May 28, 2010

இளைஞனே எழுந்திரு! இமைதிற, விழித்திரு!

மக்களாட்சியின் மாண்பு என்பது,  யார் வேண்டுமென்றாலும்  தேர்தலில் நின்று வெற்றிபெற்று மக்களுக்கு தொண்டு செய்ய உருவாக்கப்பட்டதே.  இன்றைய சூழ்நிலையில் தேர்தலில் போட்டியிடுபவர்களின் கண்ணியத்தை உலகறியும். நல்லவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது, அப்படியே போட்டியிட்டாலும் அவர்கள் ஓட்டை கூட அவர்களால் போட முடியாது. காலையிலே கட்சிகாரர்கள் போட்டுவிடுவார்கள்.

 ஒரு கட்சி வெற்றிபெறும்போது, அந்தக்கட்சியின் தலைமை அறிவிக்கும் முன்னே நாமே  கூறிவிடலாம் யார் யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கப்போகிறது என்று. புதிதாக வெகு சிலரே அமைச்சராக முடியும். காரணம் மக்களாட்சி தத்துவத்தை எந்தக்கட்சியும் கடைபிடிக்காததுதான். இவர்கள் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின் அமைச்சராகி மக்களுக்கு என்ன செய்யபோகிறார்கள் என்றால், பதில் நமக்கே தெரியும் நன்றாக. "கொள்ளையடிக்கப் போகிறார்கள் நம்மை".

எவ்வளவுதான் அவர்கள் நம்மை கொள்ளையடித்தாலும் பின்னும் நாம் அவர்களைத்தான் தேர்ந்தெடுத்து அமைச்சர்களாக்கி அழகு பார்ப்போம். ஏனென்றால் ஆளும் நேரத்திலும், தேர்தல் நேரத்திலும் அவர்கள் கொடுக்கும் இலவசங்கள். அது போன்ற இலவசங்களில் மெய் மறந்து, சீர் கெட்டுப்போய் உள்ள இந்த தமிழ்சமுதாயத்தை எந்த ஆண்டவனாலும் திருத்த முடியாது என்று கூறி ஒதுங்குவதை விட்டு விட்டு, நம்முடைய இளைஞர்கள் மேல் நம்பிக்கை வைப்போம். ஒருநாள் அவர்கள் இந்த தமிழ்சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச்செல்வார்கள் என்று நம்பி நான் எண்ணங்களை இங்கே பதிவு செய்கிறேன்.

இளைஞனே எழுந்திரு! இமைதிற, விழித்திரு!

இளைஞனே எழுந்திரு! இமைதிற, விழித்திரு!
இணைந்திடு ஓரணி,  இணையில்லா தமிழ் அணி.
பிரிவினை தவிர்த்திடு, பிரியமாய் ஒன்று சேர்
பிரளயம் நடுங்கிட, திரண்டிடு, புரட்சிசெய்!.

கேளிக்கை மயக்கத்தில், கெட்டு நீ போகாதே
சோம்பலைத் தழுவி, சுணக்கம் நீ கொள்ளாதே!
ஆட்சியில் அமர்ந்து கொள்ளையடிக்கும் கும்பல்
ஓட்டுக்கு கொடுக்கும் இலவசத்தில் மயங்கிவிடாதே!

இலவசம் என்று ஆள்வோர் தருவதெல்லாம்
இனிமை என்று, எண்ணி மகிழ்ந்திடாதே! - நீ
புரட்சிசெய்து விடுவாயோ என்று அஞ்சி, ஆளும்
புல்லையர் உனக்கிட்ட இரும்புச்சங்கிலிதான் அது.

இலவசம் என்றும் இனிப்பு விஷமடா, அதை
இல்லாதாக்கிடும் உழைப்பே மருந்தடா
உழைப்பெனும் மருந்து உன்னிடம் உண்டடா, அதை
உபயோகப்படுத்தினால், வெற்றி உனதடா

உன்னைச்சுரண்டி, சிறிது உனக்கே கொடுப்பதை
கண்ணைமூடி வாங்கிவிடாதே! கண்ணியசீலனே!
மண்ணை ஆளும் தீய சக்திகளை ஒடுக்கிடு
மக்களாட்சியை அரியணையில் அமர்த்தி விடு.

எரிமலையாய் வெடித்து, இரும்புச்சங்கிலி உடைத்து,
வரிப்புலியாய் களம் இறங்கு, வாழிய தமிழென முழங்கு.
கொள்ளையர் ஆட்சியின் குரல்வளை நெரித்திடு
நல்லதோர் மக்களாட்சி  மலர்ந்திடச்செய்திடு

அன்புடன்
பாலா வானுமாமலை

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home