சாதீய அணிகளை ஒழிப்போம்
சாதீய அணிகளாய் பிரிந்துகிடக்கும் நம் தமிழ் சமுதாயத்தை எண்ணி, மனம் கலங்கி எழுத்தாய் வடித்தது..
சாதீய அணிகளை ஒழிப்போம்
குமரிக்கண்டத்தில் பிறந்த இனமாம்
குவலயத்தில் சிறந்த இனமாம்ஓசை மொழிகள் உள்ள உலகில்
உயிருள்ள தமிழை கொண்ட இனமாம்
மண்ணுக்கும் பொன்னுக்கும் போரிட்டு
மரணத்தை காணும் மானிடர் கூட்டத்தில்
அன்னையாம் தமிழுக்கு தன்னையே தந்த
மொழிப்போர் தியாகிகள் நிறைந்த இனமாம்
தோற்றான் என்றொரு வார்த்தை அறியா
தோரணையுடனே வாழ்ந்த இனமாம்
மாற்றான் படைகளுக்கு மரணத்தை காட்டிய
மாவீரர் பலரை தந்திட்ட இனமாம்
தரணியில் மானம் என்ற சொல்லுக்கு
தனியொரு இலக்கணம் தந்த இனமாம்
கற்புக்கும், நட்புக்கும் காவியம் பல தந்த
அற்புத சீலர்கள் பிறந்த இனமாம்
இத்துனை சிறப்புடைய என்தமிழ் இனமின்று
செத்துகொண்டிருக்க காரணம் ஒன்றே
ஓரினம், ஓரணி என்பதை மறந்து
சாதிக்கு ஓரணி வைத்ததே காரணம்.
சாதீய அணிகளை ஒழிப்போம் இன்றே
சாதிக்கும் அணியாய் திரள்வோம் நன்றே
முன்னோர் வடம்பிடித்த முத்தமிழ் தேரை
முன்னைவிடவும் சிறப்பிப்போம் ஒன்றாய்
அன்புடன்
பாலா வானுமாமலை


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home