கள்ளிமலர்

A tale of a cactus flower..

Sunday, June 13, 2010

என் தம்பி சிங்கமே! வெல்க உன் லட்சியம்.



குடும்பச் சூழ்நிலையின் காரணமாக இளம் வயதிலேயே மிகபெரிய சுமைகளைத் தாங்கி, பொருள் ஈட்டும் பொருட்டு அதே சமயத்தில் தீய வழியில் செல்லாமல் உழைக்க வேண்டி வளைகுடா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்லும் தம்பிமார்களுக்கு, நான் கடந்து  வந்த  பாதைகளிலிருந்து சிலவற்றை நினைவுகூர்ந்து எழுதுவதாவது ....

என் தம்பி சிங்கமே! வெல்க உன் லட்சியம்.

மலை அளவு கவலைகள் மனம் முழுதும் நிறைந்திருக்க
தலை வாசல் கடக்கும்போல் விழிகளில் நீர் நிறைந்திருக்க
விலை மதிப்பு இல்லாத இளம் பருவம் வழி மறித்திருக்க
அலை அலையாய் மனக்கண்ணில் எதிர்காலம் தெரிந்திருக்க
நிலை கொள்ளா மனதோடு வெளிநாடு செல்லும் எந்தன்
இளையோனே! என் தம்பி சிங்கமே! வெல்க உன் லட்சியம்.

வாட்டும் குடும்பச் சூழ்நிலை, வாடியது உந்தன் மனநிலை
வீட்டைப் பிரிந்து இளமையில், வெளிநாடு செல்ல நினைத்து,
சேட்டைகள் செய்யும் இளம்பருவம் உதறித்தள்ளி, பிறந்த
கூட்டைப்பிரிந்த குருவியாய் பறந்து, நம்நாட்டை பிரியும்  உனை
போட்டிகள் நிறைந்த உலகம் வரவேற்கும், புதிர் போட்டுச்சிரிக்கும்
ஏட்டினில் இதுவரை படித்திடாத, பாடத்தை கற்றுத்தரும்

உழைத்திட போகும் உன்னை  சிறப்புகள் சேராவண்ணம், குழி
பறித்திட முயலும் கூட்டம் வலை விரித்துக் காத்திருக்கும். கவனம்.
வாய்ப்புகள் உனக்கு கிடைத்திடுமோ என்றெண்ணி சில வீணர்கள்
வாய்ப்புகழ் முன் பேசி, சதி வலையொன்று பின் விரிப்பார்.கவனம்.
ஏய்ப்போர்கள், எத்தர்கள் விரித்திட்ட சதி வலையை அறுத்திடு - நீ
எப்போதும் தெளிவுடன் இலட்சியப் பயணத்தை தொடர்ந்திடு

போட்டியில் உன்னை வெல்ல முடியாத புல்லர்கள் என்றும்
போட்டுக்கொடுத்து மாட்டிவிட நினைப்பார். கலங்கிவிடாதே!
காட்டு நரிகளை மிஞ்சும், சில குறுகிய மனமுடையோர் - வெளி
நாட்டிலும் வாழ்வார், நாடகம் செய்வார். மறந்துவிடாதே!
வாட்டும் கவலைகள் மறந்து, வாலாட்டும் தடைகளை தகர்த்து.
வீட்டின் நிலைமையை நினைத்து, விழிப்புடன் பணியாற்று.

கடின உழைப்பும், விடா முயற்சியும் நிரம்பிய நெஞ்சமும்
படித்த படிப்பும், பகுத்தறியும் திறனும் மின்னிடும் கண்களும்
பெற்றவர் கொடுத்த பெரும் சொத்து என்றே என்னாடா - நீ
மற்றவர் செய்யும் மதிகெட்ட செயலை ஒதுக்கித் தள்ளடா
அன்னைத்தமிழ் கற்றுத்தந்த நேர்மைதனை என்றும் போற்றடா -நீ
மண்ணில் வெற்றிக்கொடிதன்னை, விண்ணைத்தொட  நாட்டடா.

என்றும் உன்னை வாழ்த்தும் அண்ணன்
பாலா வானுமாமலை

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home