கள்ளிமலர்

A tale of a cactus flower..

Monday, May 17, 2010

எங்கள் நாளை



பாலைவன பூமியான அரபு நாடுகளில் பாடுபட்டுக்கொண்டிருக்கும், எனது பாசத்திற்குரிய தோழர்களுக்கு இந்தக்கவிதையை சமர்பிக்கிறேன்.

சிங்கார கொண்டையாட்டி
சேவல் கூவும் சத்தமின்றி
கோவில் மணி ஓசையின்றி
குளத்து தண்ணீர் குளியளின்றி
உறக்கம் கலையாத விழிகளுடன்
பறக்கும் வேகத்தில் சாலையில் -நாங்கள்
பயணம் செய்யும் வேலை
பாட்டாளி எங்கள் அதிகாலை


பாலைவன கப்பலென
பாரெங்கும் பெயர்பெற்ற
ஒட்டகமே தாகத்தில்
உயிரைவிடும் தேசத்தில்
சுட்டெரிக்கும் சூரியவொளி
பட்டுசுடும் பாலைவனத்தில்
இரும்புக்குழாய்கள் இருக்குமிடம்தேடி
திரும்பத்திரும்பச்செல்வதே எங்கள் வேலை


கதிரவனின் பணிமுடிந்து
கனி நிலவு பணிதொடங்க
உலகத்து உயிர்களெல்லாம்
உறைவிடம் போனபின்பு
கடமைதனை கச்சிதமாய்
கருத்துடனே செய்து முடித்து
கவசஉடை களையும் வேலை
காரிருள் சூழ்ந்த எங்கள் மாலை


கோட்டை கட்டி வாழும் வாய்ப்பை
கோட்டை விட்டு விட்டாலும்
குடிசைகட்டி வாழ்ந்திடவாவது
குறைவில்லா வாழ்வு தர
ஆண்டவனே உன்னை வேண்டி -இந்த
அரபு மண்ணில் உழைக்கின்றோம்
உயிர் உள்ளவரை வேலை, வேலை
உழைப்பாளி எங்களுக்கு இல்லை நாளை


அன்புடன்
பாலா வானுமாமலை

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home